Wednesday, 16 December 2015

மடியவில்லை மனித நேயம்

மடியவில்லை  மனித  நேயம்

பாவலர் கருமலைத்தமிழாழன்

இருள்படரும்  முன்னிரவு  மனைவி  யோடு
இருசக்கர  வண்டியிலே  சென்ற  போது
தெருமுனையின்  குறுக்கினிலே  ஓடி  வந்து
தேர்க்காலில்   விழுந்தகன்றாய்  நுழைந்த  நாயால்
இருவருமே   நிலைகுலைந்து   கீழே  வீழ
இடைநின்ற   கம்பத்தில்   தலையும்   மோத
பெருகிவந்த   குருதியாலே   மனைவி   மயங்க
பெருத்தவடி   வலியாலே   துடித்தேன்   நானும் !

பார்த்தவர்கள்   பார்த்தபடி   பதைப்பே   யின்றிப்
பாதையிரு   திசைகளிலும்   நடந்து   சென்றார்
ஊர்விழாவில்   வேடிக்கை   பார்ப்ப   தைப்போல்
உற்றுநோக்கி   அவர்வழியே   கடந்து   சென்றார்
யார்இவர்கள்   எனத்தமக்குள்   கேட்டுக்   கொண்டு
யாதொன்றும்   நடவாதது   போல்ம   றைந்தார்
வேர்போன்ற   கணியன்தன்   கேளிர்   சொல்லோ
வெறுஞ்சொல்லாய்   ஆனதென்றே   நொந்து   போனேன்!

எந்திரமாய்   மாறிவிட்ட   வாழ்க்கை    தன்னில்
எல்லோர்க்கும்   அவர்பணியே   தலையாய்   ஆக
முந்தியிங்கே   செழித்திருந்த   காடோ   யின்று
முற்றிலுமாக   மொட்டையாகிப்   போன   போல
சந்ததியை   வாழவைத்த    ஆறோ   யின்று
சாக்கடையாய்   மாறிவிட்ட   தன்மை   யாக
சிந்தனையில்   சிறந்திருந்த   நேய   மின்று
சரழிந்து   போனதுவே   எனக்கு   மைந்தேன் !

                                பெரியவர்கள்   பெண்களென   அத்த   னைப்பேர்
 பெயரளவில்   உச்சுகொட்டி   சென்ற   போது
                                உரியதொரு   பொறுப்பற்றோர்   என்றே   ஏசி
  ஊர்தூற்றும்   இளைஞர்கள்   இருவர்   வந்து
                                தெரியாத   எங்களினை   எடுத்துச்   சென்று
  தேவையெனும்   குருதியையும் கொடுத்தே காத்தார்
                                அரிதாகி   மடியவில்லை   மனித   நேயம்
   ஆங்காங்கு   இருப்பதாலே   உள்ளோம்   நாமும் !


2 comments:

  1. மடியவில்லை மனித நேயம் - அதை
    படிக்கவைக்க புனைந்தீர் பா - எதை
    கொணர்ந்தாலும் நற்றமிழில் தரும் - தங்கள்
    பாக்களை நானும் விரும்புகிறேன்!

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete