Friday, 4 December 2015

பேய்மழை

பேய்யெனப்   பெய்த   மழை
பாவலர்  கருமலைத்தமிழாழன்

நிலமெங்கே     வயலெங்கே     வீதி    எங்கே
            நின்றிருந்த    வீடெங்கே     மரங்க   ளெங்கே
நலம்கேட்டுப்    பக்கத்தில்   வாழ்ந்தி   ருந்த
            நண்பரொடு    சுற்றத்தார்    எங்கே   எங்கே
வலம்வந்த    காற்றேநீ    வன்ம    மாகி
            வாரிவந்து    பேய்மழையாய்க்    கொட்டித்   தீர்த்துக்
குலம்முழுதும்    இலங்கையிலே    அழித்த  போல
            குடியிருந்த    பகுதிகளை    அழித்து   விட்டாய் !

கடலூரைக்    குரங்கின்கை    மாலை    யாக்கிக்
            காஞ்சிபுரம்    திருவள்ளூர்    சென்னை    தன்னில்
நடனமென    ஊழிக்கூத்    தரங்க    மேற்றி
            நகரத்தைத்    தீவாக்கி   மிதக்க    விட்டாய்
படகுதனில்    மீட்புபணி    பறந்து   வானில்
            பசிக்குணவைப்    பொட்டலமாய்ப்    போட    வைத்தாய்
நடமாடும்    இடங்களினை   மூழ்க    வைத்து
            நாள்வாழ்வை    அந்தரத்தில்    தொங்க   விட்டாய் !

எதற்கிந்த    பெருங்கோபம்     எல்லாம்    உன்றன்
            ஏரிகளை    மனைகளாக்கி    விற்ற    தாலா
மதகுடைய     ஏரிகளைத்    தூர்வா    ராமல்
            மழைநீர்நீ    செலும்வழியை    அடைத்த   தாலா
வதம்செய்வாய்    என்பதினை    ஆட்சி   யாளர்
            வணிகர்கள்    தெளிவாக    உணர்ந்து    கொண்டார்
மதயானை    தனையடக்கும்    அங்குச    மாக
            மாற்றுவழி    செய்திடுவர்    அமைதி    கொள்வாய் !



No comments:

Post a Comment