Thursday, 10 December 2015

இரத்தல்
பாவலர்  கருமலைத்தமிழாழன்

இரப்பதொன்றும்    இழிவில்லை   பக்தி   யோடே
            இரந்திடுவோம்    இறைவனிடம்    அருளுக்   காக
வரமாக   நல்லமனம்    வேண்டி   நின்று
            வாய்மையொடு    பேசிடவே   இரப்போம்  நாமே
அரம்போன்ற    கூர்மையான    அறிவி    னோடும்
            அன்புசெயும்    மனிதநேயம்   இரப்போம்  நாமே
சிரம்வெட்டும்   பகையின்றிக்    கைகள்    கோர்த்துச்
            சிரித்துவாழும்    ஒற்றுமையைப்   பெறுவோம்   வேண்டி !

கரம்நீட்டிக்    கேட்பதுவோ   இழிவு !   கேட்டும்
            கரம்பார்த்தே     இல்லையெனல்    அதனினும்    இழிவு
கரவுநெஞ்சில்    இந்திரன்தான்    கேட்ட    போதும்
            கர்ணன்தான்    கவசத்தைத்    தந்த   போல
இரக்கமுடன்     மயிலுக்கும்    கொடிமுல்   லைக்கும்
            ஈந்தபேகன்    பாரியைப்போல்    கேட்கு   முன்பே
தரவேண்டும்    இடுப்புதுணி     நழுவும்   போது
            தானாக    உதவுகின்ற    கைகள்    போன்றே !

தாலிகட்டக்    கேட்கின்ற    வரதட்    சணையும்
            தன்கடமை    செயக்கேட்கும்    இலஞ்சப்   பணமும்
வேலிகளே    பயிர்களினை    மேய்தல்    போல
            வெளிப்படையாய்க்    கேட்கின்ற  பிச்சை   தானே !
காலிரண்டில்   நாம்நின்றே    கையி    ரண்டைக்
            கடுமையாக    உழைப்பதற்கே    நீட்ட    லன்றி
வாலினையே    ஆட்டிநாய்தான்     குழைதல்    போன்றே
            வாங்குதற்கு    நீட்டாமல்    கொடுத்து   யர்வோம் !


1 comment:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete